களக்காடு: களக்காடு அருகே குளத்தில் இரை தேடி வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் உப்பிலாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. களக்காடு உப்பாற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் களக்காடு பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதுபோல உப்பிலாங்குளத்திலும் தண்ணீர் வற்றியது.
ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனிடையே உப்பிலாங்குளத்திற்கு தினசரி அதிகாலையில் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கின. கடந்த சில நாட்களாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குளத்தில் தேங்கி கிடக்கும் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதற்காக வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகளை, பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.