திருப்ேபாரூர்: ஆலத்தூர் கிராமத்தில் சிட்கோ தொழிற்சாலை வளாகத்தில் செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் சிட்ேகா தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, செயல்பட்டு வந்த இந்துஸ்தான் ரெமிடிஸ் என்ற தொழிற்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், இந்த வளாகம் முழுவதும் முட்செடிகள் காடுபோல் வளர்ந்திருந்தன. இந்நிலையில், இந்த வளாகத்தில் நேற்று பகல் 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து காற்றின் வேகத்தால் மளமளவென பரவியது. தொடர்ந்து மாமல்லபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிட்கோ வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் சார்பில் தீயணைப்பு சாதனங்கள் வரவழைக்கப்பட்டன.
இரு தரப்பும் இணைந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை. இந்த தீ விபத்தால் சிட்கோ வளாகம் முழுவதும் புகை மூட்டம் பரவி பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்பட்டது. மேலும், ஆலத்தூர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனையடுத்து, தீ முழுவதும் அணைக்கப்பட்டு, அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.