சென்னை: பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்கும் போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக (Establishment and Supervision Charges) செலுத்த வேண்டி இருந்தது.
தற்போது அனைவரும் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மேற்படி 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை (Establishment and Supervision Charges) கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு வாரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாக குறைவதால் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.