தியாகி இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினம்; பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 66-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

இதனையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அவரது குடும்பத்தின் சார்பாக மகள் பிரபா ராணி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செல்வராஜ், ராஜ கண்ணப்பன், பெரிய கண்ணப்பன், கயல்விழி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பரமக்குடி முழுவதும் பல்வேறு வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி நன்றி தெரிவித்தார்.

 

Related posts

சூர்யா போன்ற அனுபவ வீரர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

இந்திய விவசாயமும் காலநிலை மாற்றமும்

ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!