இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்து இருந்தது. மேலும் கடந்த முறை போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று காங்கிரசிடம் திமுக வலியுறுத்தி வந்தது. அதற்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் 3ல் போட்டியிட திமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதில் காங்கிரஸ், மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காங்கிரஸ், மதிமுகவுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.