சென்னை: காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. லிங்குசாமி அளித்த ரூ.35 லட்சம் காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால் பிவிபி படத்தயாரிப்பு நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.
இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.