குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடெங்கும் அமல்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

முன்னதாக, இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 2019ல் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் இந்த சட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து விசிக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:

மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் காலமானதை கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்: அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

கனமழை எச்சரிக்கை.. 2.66 கோடி செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது: பேரிடர் மேலாண்மை துறை தகவல்