திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றித்திரியும் யானைகளை ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு விரட்ட முடிவு: வனத்துறையினர் தகவல்

 

ஜோலார்பேட்டை: கற்கள் வீசுவது, செல்போன் டார்ச் லைட் அடிப்பது போன்ற இளைஞர்களின் செயல்களால் காட்டு யானைகள் கடும் ஆக்ரோஷத்தில் உள்ளது. இவற்றை இருந்து ஜமனாமரத்தூர் பகுதிக்கு விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த 19 நாட்களுக்கு முன்பு வெளியேறிய 5 யானைகளில் 2 யானைகள் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பத்தில் தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. சரஸ்வதி ஆற்றில் முகாமிட்ட இவற்றை திருப்பத்தூர் மாவட்ட வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் உள்ள ஏரியில் நேற்றுமுன்தினம் இரவு வரை முகாமிட்டிருந்த யானைகள், நேற்று அதிகாலை முதல் குடியானகுப்பம் வழியாக சோலையூர் ரயில்வே மேம்பால சாலையை கடந்து சின்னக்கம்பியம்பட்டு, ரெட்டியூர் வழியாக சென்றது.

நேற்றிரவு மலையடிவாரத்தில் உள்ள ஊசிநாட்டாண்வட்டம் பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தது. அதன்பின்னர் பாரதகோயில் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் யானைகள் மீது டார்ச் லைட் அடிப்பது, கற்களை வீசுவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டனர். இதைக்கண்ட வனத்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை எச்சரித்து விரட்டினர். யானைகள் செல்லும் பாதையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்தனர்.நள்ளிரவு அந்த யானைகள், எஸ்.கோடியூர் பகுதி ஏரிக்கரை சாலை வழியாக வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, சக்கரகுப்பம் சார்பதிவாளர் அலுவலக பகுதியை கடந்தது. அப்போது அந்த கிராம மக்களும் யானைகள் மீது கற்கள் வீசி விரட்ட முயன்றனர். இதனால் யானைகள் கடும் ஆக்ரோஷத்துடன் பிளிறியது. வனப்பகுதிக்கு செல்ல வழிதெரியாமல் யானைகள் இரண்டும் தடுமாறியது. இதைக்கண்ட வனத்துறையினர் உடனடியாக கிராம மக்களை மைக் மூலம் எச்சரித்தனர்.

இருப்பினும் அவற்றை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் சிலர் யானைகளின் அருகே சென்று அவற்றை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்ெபக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களை எச்சரித்து விரட்டினர். இதனிடையே யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதற்கு ஏதுவாக மின்தடை ஏற்படுத்தினர். இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஊசிநாட்டாண்வட்டம், எஸ்.கோடியூர், சக்கரகுப்பம், வக்கணம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 யானைகளும் ஏலகிரி கிராமம், பால்ணாங்குப்பம் பகுதி வழியாக வி.எம்.வட்டம் பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். அவை வனப்பகுதிக்கு சென்றுவிடும். ஆனால் இளைஞர்கள் பலர் யானைகள் மீது கற்கள் வீசுவது, அதனருகே சென்று கூச்சலிடுவது, டார்ச் லைட் அடிப்பது போன்ற ெசயல்களில் ஈடுபடுகின்றனர். மைக் மூலம் எச்சரித்தாலும் பலர் கண்டுகொள்ளாமல் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. வெங்காயபள்ளி, ஜலகாம்பாறை, மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்தனர்.

Related posts

தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு

ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்

குமரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்; 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!