திருச்சி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்தாண்டு அண்ணா பிறந்த நாள் விழாவில் 49 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தேவையான அனைத்து கோப்புகளையும் தயார் செய்து தமிழக அரசு அனுப்பியது. அதற்கு இதுவரை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையை தமுமுக, மமக உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வரும் 28ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமிழகத்தில் திமுகவை எதிர்த்த பலர் இன்று தாங்களாகவே மனம் திருந்தி இந்தியா கூட்டணியில் சேர முனைப்பு காட்டுகின்றனர். இந்த வலுவான கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.