இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் செயல்படும் 1930 அழைப்பு மைய கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடியில் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் செயல்படும் 1930 அழைப்பு மைய கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில், ஏற்கனவே உள்ள அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் உள்ள 8 இருக்கைகளுடன், கூடுதல் 15 பணியாளர்களை (3 ஆண்டுக்கு ரூ.928.57 லட்சம்) ஒப்பளிப்பு செய்யவும். முதற்கட்டமாக இந்தாண்டிற்கு ரூ.310 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2023-24ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட ரூ.928.57 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம் கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்