கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் சற்று வெப்பம் தணிந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்குவடகிழக்கில் நகர்ந்து செல்லும் எனவும் இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலூரில் மோசமான வானிலை நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று 55-65கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனவும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.