கடலூர் : கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கின.கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரை கோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களின் வலைகளில் பல்வேறு வகையான மீன்கள் சிக்குவது பழக்கம்.
இந்நிலையில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். சிறிய வகை பைபர் படகுகள் வைத்திருப்பவர்கள் மட்டும் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கடலூர் துறைமுகத்திலிருந்து பைபர் படகுகளில் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கின.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்களை வாங்க பொதுமக்கள் சிங்காரத்தோப்பு மேம்பாலத்தின் அருகே வந்திருந்தனர். அவர்கள் மத்தி மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதன் காரணமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கூடை மத்தி மீன் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற வகை மீன்கள் குறைவான அளவே வந்திருந்ததால் மத்தி மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது.