ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடலூர் மாவட்டம் எல்லையில் நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை நேற்று முன் தினம் மாலை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஒதுங்கி படுத்திருந்த முதலை ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென்று மூதாட்டியின் காலை பிடித்து இழுத்து கடித்து குதறியது. இதில் அவருக்கு இடது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்தார்.
இதையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் முதலையின் பிடியில் இருந்து சின்னம்மாவை மீட்டனர். முதலை கடித்ததில் அதே இடத்தில் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டியை முதலை கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.