மண்டபம்: பாம்பன் கடல் வழியாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் வழியாக ரயில் போக்குவரத்து துவங்க இருக்கிறது. இதனால் மண்டபம் பகுதியில் சேதமடைந்த தண்டவாளங்களை மாற்றி புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை,திருச்சி, சென்னை உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மண்டபம் மற்றும் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பாலம் வலுவிழந்ததால் ரயில் போக்குவரத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கடலில் புதிதாக ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையம் பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் அனைவரும் பேருந்துகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பால பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டபம் பகுதியில் சேதம் அடைந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் பணிகள் அமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து மண்டபம் பகுதியில் இருந்து தினசரி சென்னை,மதுரை,திருப்பதி,கன்னியாகுமரிக்கு வாராந்திரம் வந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் மாலை நேரத்தில் புறப்பட்டு செல்கிறது. இதனால் ரயில்கள் நிறுத்தபடாமல் ரயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.