சென்னை: இயக்குநர் சங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2-வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.