இந்த நிலையில் சென்னையை தவிர மற்ற 3 நகரங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது. 2021-2022 நிதிநிலை அறிக்கையில் 5 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒன்றிய அரசு ரூ.14,788 கோடி நிதியை விடுவித்துள்ளது. இதே போல கொச்சி மெட்ரோ ரயில் பணிகளுக்கு 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் ஒன்றிய அரசு நிதி வழங்கி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மட்டும் 3 ஆண்டுகளை கடந்தும் ஒன்றிய அரசு நிதி வழங்காமல் இழுத்தடிப்பதால் மாநில அரசுக்கு நிதி சுமை அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.