சென்னை விமான நிலையத்தில் இன்று குவைத் விமானம்12 மணி நேரம் தாமதம்: 174 பயணிகள் பரிதவிப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை குவைத் செல்லவேண்டிய தனியார் நிறுவன விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்ய முடியாததால், அதில் செல்லவேண்டிய 174 பயணிகள் நேற்றிரவு முதல் 12 மணி நேரமாக விமானநிலையத்தில் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.05 மணியளவில் குவைத் நாட்டுக்கு ஜெசீரா ஏர்லைன்ஸ் எனும் தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும்.

இந்த விமானத்தில் செல்ல வேண்டிய 174 பயணிகள் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயார்நிலையில் காத்திருந்தனர். முன்னதாக, இந்த ஜெசீரா விமானம் குவைத்தில் இருந்து நள்ளிரவு 1.15 மணியளவில் சென்னைக்கு வந்து, மீண்டும் அதிகாலை 2.05 மணியளவில் குவைத்துக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நள்ளிரவு 1.15 மணியளவில் குவைத்தில் இருந்து ஜெசீரா விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை சரிசெய்தபின் குவைத் செல்லும் பயணிகளை ஏற்றி செல்லும்படி தலைமை விமானி குறிப்பு எழுதிவிட்டு ஓய்வுக்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, குவைத் செல்லும் விமானம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணி நடைபெற்றது.

எனினும், அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை பழுதுபார்க்கும் பணிகள் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாகியும் முடியவில்லை. இதனால் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நேற்றிரவு முதல் இன்று மதியம் 174 பயணிகளும் பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளை ஜெசீரா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, விமானத்துக்காக காத்திருக்கும் 174 பயணிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

மேகவெடிப்பு காரணமாக சிக்கிமில் பெருவெள்ளம், நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு