மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேரோட்டம்: எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு


திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகரில் புகழ்பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோயிலில் கடந்த 6ம் தேதி புரட்டாசி மாத 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக துவங்கியது. இந்த 10 நாள் திருவிழாவில் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அய்யா பதிவலம் வந்தார். நாள்தோறும் திருஏடு வாசிக்கப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பு நடந்தது. பின்னர் தேர் அலங்காரம் செய்தல், பணிவிடைகள் நடைபெற்றன.

பின்னர் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடை கொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி, மணலி புதுநகர் பகுதிகளில் வீதியுலாவாக வந்தார். இத்தேரோட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் துவக்கி வைத்து, முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை, ஞானதிரவியம் எம்பி, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், பிரைட் சி.முருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆதிகுருசாமி, சந்திரசேகர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Related posts

மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது: கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நீதிமன்ற உத்தரவை மீறி மயானக் கட்டுமான பகுதிக்குள் சமூக விரோத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைய முயற்சி

திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு