இதுவரை இல்லாத அளவில் 2 நாளில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மொத்தமாக 20,084 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்டத் தடப் பேருந்துகள் 9,103, உதிரி பேருந்துகள் 1,361 என மொத்த பேருந்துகளான 10,464 பேருந்துகளில் 4,446 பேருந்துகள் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் சென்னையில் இருந்து பொங்கலுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாளில் அதிகபட்சம் பேருந்துகள் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன் உள்ள மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணிப்பார்கள்.

இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு 12, 13ம் தேதிகளில் மட்டும் 4.44 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்று முன்தினம் தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. மொத்தமாக 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கடந்த 2 நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டது.

 

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி

82 வயது கார்கேவை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி