புதுடெல்லி: மற்ற கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை என்று டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார். டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, நேற்று பாஜகவில் சேர்ந்தார். இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ‘டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, பாஜகவில் சேர்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகிய போதே, அன்றே அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதுதான் பாஜகவின் அரசியல்; அவர்கள் மற்ற கட்சிகளை உடைப்பதை வேலையாக வைத்துள்ளனர். ஆனால் டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் ‘இந்தியா’ வெற்றிபெறப் போகிறது’ என்றார்.