உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு

சென்னை: உதவி வேளாண்மை, உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழ்களை வருகிற 29ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு, விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 29ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்