புதுக்கோட்டை.: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட சிறந்த மையத்திற்கும் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் தலைமையிலும், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 36 மையங்களில் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட வடக்கு அம்மாபட்டினம் முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி* சிறந்த மையமாக ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டது. இம்மையத்தில் கற்போர் தினமும் கற்கும் பணியில் ஈடுபட்டு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர். அதேபோல் கற்போர்கள் ஆர்வத்துடன் தினமும் மையத்திற்கு வருகை தந்து வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியும் பெற்றனர். இதில் பணியாற்றிய தன்னார்வலர் தினமும் கற்போருக்கு மிகச்சிறந்த முறையில் எழுத படிக்கவும், அடிப்படை கணிதம் கற்றுக்கொடுத்தார். ஆகையால் இம்மையமானது சிறந்த மையமாக மணமேல்குடி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் சண்முகப்பிரியா சினேகா மகா அஸ்வதி வனிதா மற்றும் சிறந்த குறும்படங்களை தயாரித்து வழங்கிய சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் கனிமொழி, உதயநிலா, பிரியங்கா, ஷர்மிளா பேகம், பர்வின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து தொடக்க மட்டும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி, அங்கையர் கன்னி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.