அண்ணாமலை அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை!: கோவையில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் குறித்து திமுக வேட்பாளர் விளக்கம்..!!

கோவை: கோவையில் பா.ஜ.க.வினர் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரச்சாரத்தின் போது மோதல் ஏற்பட்டது குறித்து திமுக வேட்பாளர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரவு 10 மணியை தாண்டி பிரசாரம் மேற்கொண்டதை திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கோவையில் பா.ஜ.க.வினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். கோவை தொகுதியில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பா.ஜ.க.வினர் முயற்சிக்கின்றனர். பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை தொகுதியில் தோல்வி பயத்தில் பா.ஜ.க.வினர் எதையாவது செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். அதிகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க.வினர் எல்லோரையும் மிரட்டி பார்க்க முயற்சிக்கின்றனர். பா.ஜ.க.வினர் மிரட்டல் கோவையில் எடுபடாது என திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் பேசுகையில்,

இந்த சம்பவம் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சியினர் முறையிட்டனர். இந்தியா கூட்டணி கட்சியினர் முறையிட்ட உடனேயே பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்தார். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை இரவு 10.40 மணி வரை பிரச்சாரம் செய்வது நியாயமா? எனவும் கார்த்திக் கேள்வி எழுப்பினார்.

இந்த வாரம் பல இடங்களில் அண்ணாமலை அத்துமீறி சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை அண்ணாமலை மதிக்கவில்லை. விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தோல்வி பயம் பாஜகவினர் முகத்தில் நன்றாக தெரிகிறது. கல்லூரி மாணவர்களை வைத்து பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தோல்வி பயத்தால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு