இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக பொறுப்பு உடையவர் அமித் அகர்வால் தனது மகளின் கனவை நிறைவேற்றும் வகையில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கியுள்ளார். பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் அமேசான் இந்திய தலைவர் அமித் அகர்வால் மகளான அஷி பெண்களே சொந்தமாக தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நாப்கின் இயந்திரங்களை பல பெண்களுக்கு வழங்கிவருகின்றர்.
அந்த வகையில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை சுயமாக தயாரிக்கும் இயந்திரம் பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மற்றும் மாணவிகள் இடையே ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகின்றார். அந்த வகையில் அவரது விருப்பத்தின் கீழ் சென்னை பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்களே சுயமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரத்தை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தனது மகளின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்த அமேசான் இந்திய தலைவர் அமித் அகர்வால் தன்னுடைய மகள் அஷியின் விருப்பபடி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை மாணவிகளிடம் வழங்கினார்.
அப்போது அவருடன் சேர்ந்து கல்லூரி மாணவிகள் சொந்தமாக நாப்கின்களை தயாரித்து மகிழ்ந்தனர். பெண்கள் எளிய முறையில் நாப்கின் தயாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் கல்லூரி மாணவிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடியவர் அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் பின்னர் கல்லூரி வளாகத்தில் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மாணவ மாணவியர் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.