குடியுரிமை உள்ளிட்ட பல சட்டங்களுக்கு ஆதரவு மாநில உரிமைகளை பறிக்கும்போது வேடிக்கை பார்த்தது அதிமுக : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கரூர்: மாநில உரிமைகளை பறிக்கும்போது வேடிக்கை பார்த்தது அதிமுக என்று ஜவாஹிருல்லா குற்றம்சாட்டி உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கரூரில் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் நீண்ட காலமாக உள்ள 49 பேரை விடுவிக்க கோரி, அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுநரின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை கண்டித்து அக்டோபர் 28ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். அதிமுக தனது தோளில் இருந்து பாஜவை இறக்கி விட்டது. இது எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்பது பெரிய கேள்விக்குறி.

பாஜ, கடந்த 9 ஆண்டுகளாக செய்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருந்ததை மறந்து விட முடியாது. குறிப்பாக, முஸ்லிம்களின் குடியுரிமையை பறிப்பதற்காக பாஜ கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் அதிமுக போட்ட வாக்குகளால்தான் நிறைவேறியது. இல்லாவிட்டால் அது சட்டமாக மாறியிருக்க வாய்ப்பில்லை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போது, நாடாளுமன்றத்தில் அதிமுக எதுவும் பேசவில்லை. இந்திய அளவில் இந்தியா கூட்டணி மிக வலுவான கூட்டணியாக விளங்கி வருகிறது. பாஜவின் தேஜ கூட்டணியில், ஒவ்வொரு கட்சியாக விலகி செல்வதால் அந்த கூட்டணி வலுவிழந்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை