திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்த அதிமுக ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல்சரகம் ஐந்து தலைப்பு வாய்க்கால் மெயின் சாலையில் போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4பேரை மறித்து விசாரணை நடத்தியதில், களப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த முருகன் (45), ஈஸ்வரன் (21) என்றும், இவர்கள் வந்த பைக்கில் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி (பிஸ்டல்) இருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் மற்றொரு பைக்கில் வந்தவர்கள் இவர்களது கூட்டாளிகளான கும்பகோணம் மணிகண்டன் (26), ரஞ்சித் (21) என்றும், அந்த பைக்கில் பட்டா கத்தி இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரையும் கைது செய்து, துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்தனர்.