குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அங்கு கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கட்டிடம் சேதமடையவில்லை, முறையாக வாடகை செலுத்தி வருவதால், காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல, மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்த நீதிபதி, குத்தகை சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்