ஜம்மு: இமயமலையின் தெற்கு காஷ்மீர் பகுதியில் 3,880 மீட்டர் உயரமுள்ள இடத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருடத்தில் 62 நாட்கள் பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்ததால், கடந்த சில நாட்களாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜம்முவில் இருந்து 7,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரட்டை தள முகாம்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அனந்த்நாக்கில் இருந்து 48 கி.மீ தூரமுள்ள நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் குறுகிய அளவிலான 14 கி.மீ தூர பால்டால் பாதையில் பக்தர்கள் பயணித்தனர். 7,392 பக்தர்கள் அடங்கிய 13வது குழு, பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 272 வாகனங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.