அய்ஸ்வால்: மியான்மரில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் பல்வேறு குழுக்களாக ராணுவத்தினர் மீது ஆயுத தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 16ம் தேதி இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள சின் மாநிலத்தில் உள்ள டூபுவால் ராணுவ முகாம் மீது சின் தேசிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதனையடுத்து அங்கிருந்து தப்பித்த 29 ராணுவ வீரர்கள் மிசோரம், சம்பை மாவட்டம் சாய்கும்பை பகுதிக்கு கால்நடையாக ஓடிவந்து தஞ்சமடைந்தனர். அவர்களை அசாம் ரைபிள் படையினர் தங்கள் கஸ்டடியில் வைத்திருந்த நிலையில், நேற்று 29 வீரர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மணிப்பூர் மோரே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மியான்மரின் டாமு நகருக்கு அவர்கள் சென்றனர்.