அதன்படி அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், குடோனில் உள்ள சேலை உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்க அனுமதி கோரியும் குடோன் உரிமையாளரான பாக்கியலட்சுமி யுவராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ் புத்தாண்டுக்காக தனது ஆற்றல் அறக்கட்டளை மூலம் துப்புரவுப் பணியாளர்களுக்கு புடவைகள் வழங்குவதற்காக,தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே புடவைகள் வாங்கப்பட்டது. தங்களிடம் ஆற்றல் அசோக் குமார் ஆர்டர் செய்திருந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவற்றை வழங்க முடியாததால், குடோனில் வைத்திருந்தோம்.
புடவைகள் வைக்கப்பட்டதற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை. புடவைகள் வாங்கியதற்கான ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்தும் குடோன் சீல் வைக்கப்பட்டது. சீலை அகற்றுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி மனு அளித்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.