வேலூர், மே 11: வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளில் சேர நடந்த தேர்வில் 103 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 31 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9, 11-ம் வகுப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கையும், விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6 முதல் 8ம் வகுப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடைபெற இருக்கிறது.
இதற்காக மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்குகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7,8,9 மற்றம் 11ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தலைமையில் மாவட்ட உடற்கல்வி இயக்குனர் சரஸ்வதி முன்னிலையில் நடந்தது. இதில் 103 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கபடி, வாலிபால், ஹாக்கி, நீச்சல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இன்று மாணவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.