வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் திருவலத்தில் பழமை வாய்ந்த

திருவலம், மார்ச் 22: திருவலத்தில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் பொன்னையாறு ‘நீ வா’ நதிக்கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க நால்வரால் பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ தேர் திருவிழா, சிவானந்த மவுனகுரு சுவாமிகள் குரு பூஜை விழா, சிவகாமியம்பாள் சமேத நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம், மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி கிரிவலம், பக்தி சொற்பொழிவுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கோயில் பிரமோற்சவ திருவிழாவினையொட்டி கடந்த 15ந்தேதி கோயில் கொடிமரத்தில் பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது. அன்று முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிலையில் பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. இதனையடுத்து தேர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்