விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள் சேகரிப்பு அதிகாரிகள் தகவல் திருச்சி அரசு ஐடிஐயில் சேர

வேலூர், மே 23: திருச்சி மத்திய சிறை அரசு ஐடிஐயில் சேர விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சிறைவாசிகள் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 பேர் சிறை ஐடிஐயில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேர்க்கை அனுமதி அளிக்கப்பட்டது. திருச்சி அரசு ஐடிஐயில் சேர்க்கையை முடித்து, விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் தமிழக சிறைகளில் தகுதியுள்ள கைதிகளை அரசு ஐடிஐக்களில் சேர்த்து கொள்ளலாம் என சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்தது. அதில், புழல்-1, புழல்-2, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்த்து பயில விருப்பமுள்ள கைதிகளின் விவரங்களை சேகரித்து பட்டியலை அனுப்பி வைக்குமாறு சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வேலூர், புழல்-1, புழல்-2, மதுரை, சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்ந்து பயில விருப்பமுள்ள கைதிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கைதிகளின் கல்வி சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்காக திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கைதிகள் ஐடிஐயில் சேருவதற்கு அனுமதி கிடைத்தும், அவர்கள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை