விருதுநகர், ஏப். 17: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பேரணியை கல்லூரி துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் தர்மராஜன், துணை செயலாளர் ஸ்ரீமுருகன், ஆவண பாதுகாவலர் டாக்டர் புகழேந்திபாண்டியன், கல்லூரி முதல்வர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.
விழிப்புணர்வு பேரணி மதுரை புறவழிசாலை போக்குவரத்து பணிமனை துவங்கி காளவாசல் ஜெர்மான்ஸ் ஹோட்டல் வரை சென்றது. பேரணியில், வரும் ஏப்.19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 18வயதிற்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்திட வேண்டும். பணம், பொருள் வாங்காமல் தகுதியான நபருக்கு வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.