நாகர்கோவில், ஏப்.15: கன்னியாகுமரி மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட உள்ளது. இங்கு மின்னணு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கூடம், போலீசார் பாதுகாப்பு மேற்கொள்ளும் பகுதிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் இடங்கள்,
இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் சேஷகிரி பாபு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தயார் செய்யப்பட்டுள்ள வரைபடத்தை கொண்டு அவருக்கு அதிகாரிகள் விளக்கினர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தேர்தல் தாசில்தார் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.