பணகுடி, ஜூலை 11: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கபடிப் போட்டியில் சாதனை படைத்த உவரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகளை சபாநாயகர் அப்பாவு பாராட்டினார். மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான கபடிப் போட்டி சென்னையில் நடந்தது. இதில் மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட போட்டியில் சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தர வரிசை அடிப்படையில் தேர்ச்சி பெற்றனர். இதில் நெல்லை மாவட்டத்தில் உவரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகள் பிதுஷிகா, அகிலன் மகள் டினிஷா இடம் பிடித்ததோடு சென்னையில் ஈரோடு அணியுடன் நடந்த இறுதிப்போட்டியில் 2ம் இடம் வென்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். இதையடுத்து சாதனை படைத்த மாணவிகள் சபாநாயகர் வீட்டிற்கு பெற்றோருடன் சென்று வாழ்த்துப் பெற்றனர்.