நாமக்கல், ஜூன் 8: நாமக்கல் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் இரவு 8 மணி செயல்படும் என, மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் கிளை நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம், மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகம் இதுவரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது இங்கு வந்து படிக்கும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன், மாணவ மாணவியர் மத்தியில் பேசி, போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் அவசியம் பற்றி விளக்கினார். பொது நூலக இயக்குநர் வழிகாட்டுதலின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அப்போது அவர் கேட்டுகொண்டார். இந்நிகழ்ச்சியில், நூலகர் ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.