புதுக்கோட்டை அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா?

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியை மாவட்ட கலெகர்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் (நேற்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியின் வகுப்பறை கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் குறித்தும், கழிப்பறை வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது குறித்தும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பள்ளியில் கழிப்பறை வசதி தேவைப்படுவதை அறிந்து, மாவட்ட கலெக்டர் 2 நாட்களுக்குள் Mobile Toilet வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், பள்ளியின் மேம்பாட்டு வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில், கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், அலுவலர்களுடன் நேற்று கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் தெரிவித்ததாவது: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் 21 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஒரு குழந்தை தொழிலாளர்கள் கூட இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பேருந்து நிலையங்கள், சாலை சிக்னல்களில் குழந்தை தொழிலாளர்கள் குறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை நகர்மன்றம் அருகில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான இடவசதி மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கூர்நோக்கு இல்லங்களில் சிறார்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறைக்கப்படும். மேலும் குழந்தைகளே தாங்களாக முன்வந்து தங்களுக்கு ஏற்படும் குற்றங்களை புகார் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்தும் பொழுது அவர்களின் மீதான குற்றங்கள் குறையும் என தெரிவித்தார். எஸ்பி வந்திதா பாண்டே, டிஆர்ஓ செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது