குடியாத்தம், பிப்.2: நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் உடல் நேற்று, குடியாத்தம் அருகே சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கலெக்டர், எஸ்பி மற்றும் எம்எல்ஏ நேரில் அஞ்சலி செலுத்தினர். சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், தெகல்குடம் கிராமத்தில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, நக்சல்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் தேவன் என்பவரும் பலியானார்.
இதையடுத்து, இறந்த வீரரின் உடலானது விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து வேன் மூலம் சொந்த ஊரான கே.மோட்டூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் தேவன் உடலுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மணிவண்ணன், எம்எல்ஏ அமுலு விஜயன், நகராட்சி தலைவர் சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிஆர்பிஎப் வீரர் இறந்த சம்பவத்தால் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.