சேலம், மார்ச் 20:சேலம் கிச்சிபாளையம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சேகர் (எ) நாய்சேகர் (46). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தாதுபாய்குட்டை டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்தார். பின்னர் அவர் தலையில் பலத்த காயத்துடன் அந்த பகுதியில் விழுந்து கிடந்தார். அவரது மகன் அஜித்குமார், அவரை வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் மீண்டும் அவர் எழுந்திருக்கவில்லை என்பதால் அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனி பகுதியை சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளராக உள்ள சின்ராஜ் (38) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது செல்போனை சேகர் எடுத்துக்கொண்டதாகவும் அதனை கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து தள்ளிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்னர். அப்போது சின்னராஜ் அவரை அடிக்கும் காட்சிகளும் அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பேர் சேகரை அடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது தெரிந்தது. இதையடுத்து சின்ராஜ், மோகன் (எ)கிங்காங்(25) ஜலால்புறா பகுதியை சேர்ந்த இம்ரான்(34) ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், சின்ராஜ், மோகன், இம்ரான் ஆகியோர் அந்த பகுதியில் கிடக்கும் மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்து அந்த பணத்தை 3 பேரும் பங்கு போட்டு மது குடிப்பார்கள்.
மேலும் தாங்கள் எடுக்கும் பாட்டிலை சேகர் எடுத்து விற்பனை செய்து மது குடித்து விட்டதாகவும் இதன் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.