திருமயம் அருகே மேரிநகர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா

திருமயம். ஏப்.11:திருமயம் அருகே பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேரிநகர் பகுதியில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் அப்பகுதி மக்களால் திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 11ம் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நாட்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகளில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரதேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 10 மணியளவில் புனித அடைக்கல மாதா, புனித செபஸ்தியார் உருவச் சிலைகள் தனித்தனி சப்பரத்தில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜார்ஜ் அடிகளார், அருட் சகோதரிகள், மேரி நகர் ஊர் பொதுமக்கள், அன்புக்குழு இளைஞர்கள் அடைக்கல மாதா மகளிர் மன்றம், கத்தோலிக்க நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு