காரைக்கால்,ஏப்.14:காரைக்காலில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தமிழகப் பகுதிக்கு காரைக்காலில் இருந்து மதுக்கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மது கடத்தலை தடுப்பதற்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானம் ,பீர் மற்றும் கள் ஆகிவை கடத்தப்படுவதாக திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து எஸ்.பி பாலச்சந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மேற்பார்வையில் எஸ்.ஐ.ராஜா தலைமையிலான போலீசார் அம்பகரத்தூர் சுற்றியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை மற்றும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அம்பகரத்தூர் தமிழக எல்லையான சோழங்குறிச்சி பகுதி அருகே தமிழக பகுதியான மயிலாடுதுறைக்கு கடத்த முயன்ற ₹40 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், பீர் வகைகள் மற்றும் கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறை அடுத்த அருணா நகரை சேர்ந்த பாலு(24) என்பவரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிடிபட்ட மதுபாட்டில்களை போலீசார் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.