தொண்டி,ஏப்.18: பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மரக்கன்றுகள் நட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெயிலின் கொடுமை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொண்டியிலிருந்து திருவாடானை செல்லும் வழியில் தினையத்தூர் பகுதியில் மட்டுமே சாலையோரம் மரங்கள் உள்ளது. மற்ற பகுதியில் எங்கும் மரங்கள் இல்லை.
இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியிலிருந்து ராமநாதபுரம் வரையிலும் சுமார் 50 கி.மீட்டர் தூரம் மரங்களே கிடையாது. இது டூவீலர் மற்றும் வாகனங்களில் செல்வோரை சோர்வடைய செய்கிறது. அதனால் ஒவ்வொரு ஊராட்சியின் சார்பிலும் ஊரின் வெளியே நூறுநாள் வேலை ஆட்களை கொண்டு மரங்களை நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சாதிக் பாட்ஷா கூறியது, ‘‘சாலையின் ஓரங்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெட்டப்பட்டது.
ஆனால் மீண்டும் நடப்பட வில்லை. வெயில் கடுமையாக இருப்பதால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சாலையின் இரண்டு பக்கமும் மரங்கள் வளர்த்தால் குளுமையாக இருப்பதோடு மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு. ஊராட்சியில் தங்களுக்கு உட்பட்ட பகுதியில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். தற்போது நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கண்மாய் மற்றும் குளங்களை சுற்றிலும் மரம் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாலையின் ஒரத்திலும் மரக்கன்று நடவேண்டும்’’ என்றார்.