சுரண்டை,ஜூன் 3: சுரண்டை அருகே ராமசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ராமசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24ம் தேதி திருக்கொடி ஏற்றுதல் மற்றும் திருத்தேர் கால் நாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டியார் திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு 21 வகையான அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்தி அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 3 மணியளவில் பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதில் சாம்பவர்வடகரை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.