போச்சம்பள்ளி, ஏப்.10: காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவத்துவாடி ஊராட்சியில், கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி மலை குன்றுகள் நிறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், அ்ங்குள்ள செடி கொடிகள் மற்றும் மரங்கள் வாடி வதங்கி காணப்படுகின்றன. இந்நிலையில், சுட்டெரித்த வெயிலுக்கு மரங்கள் தானாக தீப்பிடித்து எரிந்தன. மலை உச்சியில் தீப்பற்றி எரிந்ததால் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காட்டுத்தீ பரவியதை கண்ட அப்பகுதி மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடம் விரைந்த வீரர்கள் சுமார் 3 மணி போராடி தீயை அணைத்தனர். இதில், அங்கிருந்த பெரும்பாலான மரங்கள் எரிந்து சாம்பலானது.