கரூர், ஆக. 24: கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மாயனூரில் 84 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதுகுறித்த விவரம் வருமாறு: தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், கரூர் மாவட்டத்தில் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அதன்பின் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி, நல்ல மழை பெய்தது.
மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கரூர் 1.8, குளித்தலை 25, தோகைமலை 8.4, கிருஷ்ணராயபுரம் 81.1, மாயனூர் 84, பஞ்சப்பட்டி 43.4, கடவூர் 10, பாலவிடுதி 34.2, மைலம்பட்டி 30, மாவட்டத்தில் சராசரி மழை அளவு 24.48. க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் மழை இல்லை. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.