பிரமனும் திருமாலும் அடிமுடிதேட அழல்மலையாய் நின்ற பெருமான், மானிடர் உய்யும் பொருட்டு கல்மலையாக நின்ற இடமே திருஅண்ணாமலையாகும். அவர் அந்நாளில் ஜோதி வடிவாய் நின்றதை விளக்கவே இந்நாளில் மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்று அருணாசலபுராணம் கூறும். இங்கு சிவராத்திரி பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இது மாசிசிவராத்திரிக்கு உரிய தலமாயினும், இந்நாளில் கார்த்திகை தீபத்தாலேயே மிகப்பெருமை அடைந்துள்ளது.
திருக்கடையூர்
இது மார்க்கண்டேயன் எமனை வெல்லும் பொருட்டு சிவபூசைசெய்த இடம். மூன்றாம் ஜாமத்தில் இங்குள்ள லிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு அவனுக்காக எமனை உதைத்து வீழ்த்திய இடம். சிவபெருமான் காலசம்ஹாரராக பெரிய திருச்சபையில் எழுந்தருளியுள்ளார். உதைபட்ட எமன் காலடியில் கிடக்கும் நிலையிலும் பின்னர் அருள்பெற்று வணங்கும் நிலையிலுமாக இரண்டு உலாத் திருமேனிகளாக அமைந்துள்ளான்.
காஞ்சி
சிவபெருமானின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூட அதனால் உலகத்தில் இருள்சூழ, பெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பத்தால் உலக உயிர்கள் வருந்தின அப்பாவம் நீங்க சிவனை பார்வதிதேவி பூசித்த இடம் இதுவாகும். உலகம் இருண்ட அந்த காரமாக இரவில் உருத்திரர்கள் இங்கு பூசித்தனர். அந்த உருத்திரர்கள் பூசித்த ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம் இவ்வூரில் உள்ளன. காஞ்சிப் புராணத்தில் இவ்வூரில் ஒரு பகுதி உருத்திரசோலை என வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம்
சிவமகாபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள மான், வேடன் கதை நடந்த இடம் இது என்பர். ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும் இடம் இது
வாகும். மல்லிகை மலர்களைச் சூடுவதால் இப்பெருமான் மல்லிகார்ச்சுனர் என்றழைக்கப்படுகிறார்.
திருவைகாவூர்
இதுவும் சிவராத்திரி தலமாகும். இதனை சிவராத்திரி கதைப் பகுதியில் காண்க. இது ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பதியாகும். இந்த ஊர் தலபுராணத்தில் சிவராத்திரி மகிமை எமனை உதைத்தது எமன் அருள் பெற்றது ஆகியன விரிவாக பேசப்பட்டுள்ளன.
ஓமமாம்புலியூர்
சிதம்பரத்தை அடுத்து 24 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திலும் திருவைகாவூர் புராணத்தையொட்டிய வேடன் புலிக்கதை கூறப்படுகிறது. சிவபெருமான் பிரணவப் பொருளை தேவிக்கு உரைத்த இடம். பிரணவ வியாக்ரபுரம் எனவும் அழைக்கப்பெறும்.
திருக்கழுக்குன்றம்
கோடி உருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூசித்த இடம். இந்த தலம் உருத்திரகோடி என்றும் அழைக்கப்படும். இவை தவிர ஸ்ரீகாளத்தி, திருக்கேதீச்சரம் திரிகோணமலை, மதுரை முதலியனவும் சிவராத்திரிக்கு உரிய தலங்களாகும்.