கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு சந்திப்பில், தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணித்த, சத்தியவேடு அடுத்த டி.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பைசுபீ(33) என்ற பெண்ணிடம், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. உறவினரின் திருமணத்திற்காக, வண்ணாரப்பேட்டையில் துணி எடுக்க பணத்துடன் சென்றதாக பைசுபீ தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்திற்கு சீல் வைத்து, கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைத்தார்.