வீட்டு தனிமையில் உள்ளனர்குமரியில் பெண்களைஅதிகம் தாக்கும் கொரோனா

நாகர்கோவில், ஏப்.4: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 9 பேர். பெண்கள் 16 பேர் ஆவர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆண் குழந்தையும் அடங்கும். அதிகபட்சமாக முஞ்சிறை ஒன்றியத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 83 ஆயிரத்து 968 ஆக அதிகரித்து இருக்கிறது.

தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே வருகிற 10, 11ம் தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் தலைமையில் கொரோனா கால அவசர சிகிச்சைக்காக ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு இருக்கிறது. மேலும் காய்ச்சல் பரிசோதனை மையமும் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. தற்போது தினமும் காய்ச்சல் பரிசோதனை நடக்கிறது. கொரோனா வார்டில் முதியவர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது கொரோனா கண்டறியப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உள்ளவர்களில் சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த நிலையில் கொரோனாவில் தற்போது பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2ம்தேதி 25 பேர் பாதிக்கப்பட்டதில் 19 பேர் பெண்கள் ஆவர். கடந்த 1ம்தேதி 19 பேர் பாதிக்கப்பட்டதில், 15 பேர் பெண்கள் ஆவர். பெண்களுக்கு அதிகமாக காய்ச்சல், சளி வருவதால் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய பாதிக்கப்பட்டவர்களில் யாரும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை. 2, 3 நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடப்பதாக டாக்டர்கள் கூறினர்.

Related posts

குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை

கருங்கல் அருகே சுருண்டு விழுந்து முதியவர் பலி