மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்தி மாலை, இருமுடி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

சென்னை, டிச.25: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்தி மாலை, இருமுடி விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி செலுத்தி வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா கடந்த 1ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வந்து, ஆதிபராசக்தி கருவறை முன்பாக சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.

இந்த இருமுடி விழா, வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. ஜனவரி 25ம் தேதி ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தைப்பூச ஜோதி ஏற்றப்பட உள்ளது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவினை ஒட்டி தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இருமுடி செலுத்தினர்.

இவர்களுக்கு ஆதிபாராசக்தி சித்தர் பீடம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் மேற்பார்வையில் ஆன்மிக இயக்கத்தினர் செய்திருந்தனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது